Friday, May 28, 2010

முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்

முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைவருமே மிக மகிழ்ச்சியாக வகுப்புகளுக்கு செல்வதில்லை. பல குழந்தைகள் ஒரு சில நாட்களுக்கு பள்ளி செல்லும் போது பயம் கொண்டர்வர்களாகவே செல்கிறார்கள். குறிப்பாக சில குழந்தைகள் ஆசிரியர்களைப் பார்த்து பயம் கொண்டு, அதனால் பள்ளிக்கு செல்ல பயம் கொள்கிறார்கள்.பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் வளர்க்கும்போது சாப்பாடு ஊட்டும் போது அல்லது தங்களுக்கு குழந்தைகளை பணிய வைக்க வேண்டும் என்று நினைக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ள யாரையாவது காட்டியோ, அல்லது குறிப்பிட்டு சொல்லியே பயமுறுத்தி வளர்ப்பது, குழந்தைகளை பிறரோடு சேர்ந்து வெளியிடங்களில் விளையாட அனுமதிக்காமல் வளர்ப்பது, பூச்சாண்டி வருகிறார் என்று கூறி வித்தியாசமாக பிம்பம் ஒன்றை குழந்தைகள் மனதில் வளர்ப்பது ஆகியவை குழந்தைகளின் ஆசிரியர் பற்றிய பயத்திற்கு அடிப்படை காரணங்களாகும்.

சில பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் ஆசிரியர் சொல்லும் படி நடந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் அடித்து விடுவார் என்று எச்சரிக்கையாக கூறி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவர். இவ்வாறு கூறுவது ஆசிரியரை சந்திக்கும் முன்பே அவரைப் பற்றிய பய உணர்வை ஏற்படுத்த வழி வகுக்கும். சில ஆசிரியர்கள் முதல் நாள் பள்ளி திறந்த உடனேயே கையில் குச்சியும் முகத்தில் கடுகடுப்புமாக குழந்தைகள் முன் பூதம் போன்று தோன்றுவர். இத்தகைய ஆசிரியர்கள் இறுகிய மனம் கொண்ட குழந்தைகளின் மனதில் பள்ளியிறுதி காலம் வரைக்குமான பயத்தை உண்டாக்கி விடுவார்கள்.

சில குழந்தைகளுக்கு செனோ போபியா என்னும் புதியவர்கள் பற்றிய காரணமில்லாத, புரியாத பயம் இருக்கலாம். இரண்டு வயதுக்கு முன்பாக தாய் குழந்தையை பிரிந்து வேலைக்கு செல்வது, அம்மா வீட்டில் வளர்ப்பது, பச்சிளம் குழந்தையாக இருந்தபோது சிறிது நேரம் அழவிட்டு குழந்தையின் பசியாற்ற பால் ஊட்டுவது ஆகியவையே புதியவர்களை பார்த்து காரணமின்றி பயம் கொள்ள வைக்கின்றன. இத்தகைய குழந்தைகளை வளர்ப்பு முறையை மாற்றி கவனத்துடன் வளர்த்தால் புதியவர்கள் பற்றிய பயமின்றி வளர்க்கலாம்.

ஓர் குழந்தை தன் ஆசிரியருக்கு பூங்கொத்து ஒன்றை அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிச் சென்றது. வகுப்பறைக்கு சென்றவுடன் நேராக ஆசிரியரிடம் சென்று பூங்கொத்தை கொடுத்தது. வகுப்பாசிரியர் குழந்தையை வாழ்த்தி பூங்கொத்தை பெற்றுக் கொள்ளாமல் “நீயே வைத்துக்கொள்” என்று கூறினார்.

குழந்தையின் முகம் வாடிவிட்டது. பேசாமல் பூங்கொத்தை தன் பைக்குள் வைத்துக்கொண்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டது. மாலை வீட்டுக்கு வரும் நேரத்தில் குழந்தையின் தந்தை அக்குழந்தையை நேராக பள்ளி முதல்வரின் அறைக்கு அழைத்துச் சென்று அப்பூங்கொத்தை பள்ளி முதல்வருக்கு அளிக்கச் செய்தார். முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இறைவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும் குழந்தாய்” என்று கூறி பெற்றுக் கொண்டார். அக்குழந்தை “நன்றி என்று கூறியது.அக்குழந்தை மகிழ்ச்சியுடன் நன்றி என்று கூறுவது ஆசிரியர் கையில் தான் உள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!