Saturday, July 3, 2010

பிரேசில்-கனவு தகர்ந்தது

காலிறுதிப் போட்டிகள் ஆரவாரமாக ஆரம்பித்திருக்கின்றன. முதல் இரு போட்டிகளே சுவாரசியத்திற்கு ஏதும் குறை வைக்காமல் நடந்து முடிந்துள்ளன.


பிரேசில் அணியின் தோல்வி நிறைய பேருக்கு ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம்.
நெதர்லாந்து அணியை ஒரு அண்டர் டாக் அணி என நினைத்தவர்களுக்கு ஆமாம் சார் நாங்க அப்படித்தான் ஆனா யாருக்கும் எங்களால அதிர்ச்சி வைத்தியம் தர முடியும் என நிரூபித்திருக்கிறார்கள் அவர்கள்.

ஆனால்,நேற்றைய ஆட்டத்தைப் பார்த்திருந்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருக்கும். பிரேசில் அணிக்கு கோலடிக்க நிஜமாகவே கிடைத்தது ஓரிரு வாய்ப்புகள் மட்டுமே. அதை அவர்கள் ஓரளவு பயன்படுத்திக் கொண்டு ஒரேயொரு கோல் அடித்தனர். ஆனால், நெதர்லாந்து அணிக்கு நேற்று கிடைத்த வாய்ப்புகள் கிட்டத்தட்ட பத்து. அதில் அவர்கள் கோலாக மாற்றியது இரண்டை மட்டுமே. நீங்கள் மட்டமாக ஆடுங்கள் கவலையில்லை. ஆனால் உங்கள் எதிரி தன் உண்மையான பலத்தைப் பயன்படுத்தத் தவறினால் ஜெயம் உங்கள் பக்கம்தான் என நிரூபித்தது நேற்றைய ஆட்டம்.

இரண்டாவது காலிறுதியில் முதல் போட்டியளவு சுவாரசியம் இல்லையென்றாலும், ஆட்டத்தின் கடைசிக் கட்டம் ஒரு அற்புத திகில் நாவல்.
ஆட்டம் முடிந்த கடைசி நிமிடத்தில் உருகுவே அணி வீரர் பெற்ற சிகப்பு அட்டை மூலம் கிடைத்த பெனால்டி ஷூட்டை கானா அணி பயன்படுத்தத் தவற பின்னர் வந்த "நானா நீயா" டை பிரேக்கரில் நான்குக்கு இரண்டு என உருகுவே வென்றுள்ளது.

இப்போது அடுத்த இரு காலிறுதிப் போட்டிகளின் நிகழ்வுகளுக்கு முன் நம் மனதில் சுவாரசியம் ஏற்படுத்தும் ஒரு கேள்வி....நெதர்லாந்து, உருகுவே இந்த இருவரில் யார் இறுதிப் போட்டிக்குப் போகப் போகிறார்கள் என்பதுதான்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!